Thursday, 27 May 2010

இது எங்கள் கோடை


ஏப்ரல் மாதம் வரை
எங்கள் வீட்டில் நிலவிய வெப்பம்
மே மாதத்தில்
காணாமல் போனது 

வீடெங்கும் அழகு
நாள் எல்லாம் இனிமை
மின்வெட்டு என்பதை
நாங்கள் உணர்வதே இல்லை

அங்கங்கே குவிந்து கிடக்கும்
புத்தகங்களும் உடைகளும்
தரை முழுவதும் பரவிக்கிடக்கும்
தலை முடிகளும்
அழகாக்குகின்றன
எங்கள் வீட்டை

படுக்கைகளில் பரப்பப்பட்ட
சுடிதார்களும் அணிகலன்களும்
இடம் மாற்றி வைக்கப்பட்ட
செல்போன் சார்ஜர்களும்
மூலையில் கிடக்கும்
தொலைக்காட்சி ரிமோட்டும்
ஏனோ எரிச்சல் தருவதில்லை

குளியலறைகளில் புதிய வாசனைகள்
கண்ணாடி முன்பு
விதவிதமான டியூபுகள் கிரீம்கள்
காணமல் போன என் சீப்பு
இதெல்லாம் என் முகத்தில்
உண்டாக்கும் புன்னகைகள்

நாள்முழுதும் அலறும்
செல்போன் பாடல்கள்
நள்ளிரவு வரை
அம்மாவுடன் படுத்துக்கொண்டு
குசுகுசுக்கும் குரல் ஓசைகள்
எனக்கு தாலாட்டு போலவே
கேட்கின்றன

ஹாஸ்டலில் இருக்கும்
உங்கள் மகள்கள்
வீடு வந்தால்
உங்களுக்கும்
கோடை சுகம்தான்.

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem270510.asp

Friday, 14 May 2010

இது எங்கள் மதுரை

நதிக்கரை நகரமெல்லாம்
நாகரிகத் தொட்டில் என்று
மதுரையைப் பார்க்காமல்
மனம்போலச் சொன்னது யார்?

துகிலுரிந்த திரௌபதி போல்
மணல் இழந்த வைகை நதிப்
பரப்பெல்லாம் குப்பை
பரந்தோடும் சாக்கடைகள்

பக்தர் குறைதீர்க்க
மலை இறங்கி வரும் எங்கள்
அழகர்க்கும் போர்வெல் நீர்
ஆறாகும் தலையெழுத்து

அன்னை மீனாட்சி
ஆட்சி செய்யும் மாநகரில்
தெருவெங்கும் பிச்சைகேட்கும்
கைக்குழந்தைத் தாய்மார்கள்

புத்தி இழந்தவர்கள்
போதை வசப்பட்டவர்கள்
சித்தம் கலங்கித்
திரிகின்ற தெருக்கள் பல

உணவென்ற பேரில்
விஷம் போடும் உணவகங்கள்
உண்டபின் பிழைக்க
உண்பவர்கள் சொக்கரில்லை

வீடு வந்து சேரும் முன்பு
வீடு பேறு தந்து விட
போட்டியிடும் ஷேர் ஆட்டோ
யம தூதர் வாகனமாம்

சொக்கா, எமைக் காக்க
நீ மீண்டும் வர வேண்டும்
சுந்தரேசா கண் திறப்பாய்
தாமதித்தால் மதுரைக்கு

நகரம் என்ற பேர் போகும்
நரகம் என்ற பேராகும்
கடல் கொள்ளாமலே
கடம்பவனம் மறைந்து விடும்
*

யூத்புல் விகடனில் வந்த கவிதை!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem110510.ஆசப்

என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்த தேனம்மைக்கு நன்றி

Saturday, 1 May 2010

இது எங்கள் பள்ளிக்கூடம்!

எங்கள் வகுப்பறை இருந்த இடத்தில்
கடைகள் கட்டப்பட்டு விட்டன

நாங்கள் ஒளிந்து விளையாடிய
கருவேல மரங்கள் நிறைந்த
விளையாட்டு திடல்
சோதனைச்சாலையாக மாறி விட்டது

நாங்கள் மரத்துக் கபடி விளையாடிய
வேப்ப மரங்கள் வெட்டப்பட்டு
சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிவிட்டது

எங்கள் பள்ளியில் மதிய உணவு சமைத்த
முனியம்மாவின் மகன்
எங்கள் வகுப்புத்தோழன்
சின்னராசு மட்டும்
பள்ளி வாசலில்
ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறான்

மண்டையன் என்றழைக்கப்படும் ராயன்
ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

எங்கள் வகுப்பின்
முதல் மதிப்பெண் பெற்ற சண்முகம்
நாற்பதெட்டு வயதிலும்
கையில் மஞ்சள் பையோடு
பை நிறைய மதிப்பெண் சான்றுகளோடு
காலில் செருப்பில்லாமல்
எங்கெங்கோ
அலைந்து கொண்டிருக்கிறான்

யூத்புல் விகடனில் வெளிவந்த என் கவிதை!!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/jayarajapoem290410.asp

Wednesday, 14 April 2010

சில புகைப்படங்கள்

திருப்பதியில் பாசி விற்கும் ரோஸி என்ற நரிக்குறவப் பெண் (அவங்க கூட ஜெயந்தியும் மோனிகாவும்)
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஜெயந்தியும் மோனிகாவும் ஷாப்பிங் செய்த போது

இந்த முகமூடிகளை வீட்டில் மாட்டினால் ஆவிகள் அணுகாது என்பது நேபாளிகளின் நம்பிக்கை
ஒரு படத்தில் நேபாளு கோபாலு என்று வடிவேல் பாடிய இடம்
வாரணாசியில் தினமும் கங்கைக்கரையில் நடைபெறும் ஆரத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு

Sunday, 11 April 2010

பருவம் மறந்த மரம்

வசந்தத்தில் கூட
இலை உதிர்க்கும்
முட்டாள் மரமே

நிறுத்து இதை.
இது
வண்ணப் பூக்களை
வாரி இறைக்கும்
வசந்த காலம்.

Saturday, 10 April 2010

நிழல் மரமும் வழிப்போக்கனும்

என் பயணம் நீளமானது
கடும் வெயில்
நடை தளர்ந்த போது
மரம் ஒன்று கண்டேன்
கிளிகள் கொஞ்சும் மாமரம்
அழகு அழகு அத்தனை அழகு
நிழலில் அமர்ந்தேன்
சொர்க்கம் கண்டேன்

மரமே, உனக்கு நன்றி
கால்களை நீட்டி
கண்கள் சிறிது அயர்ந்தேன்

மரமும் என்னைக் கண்டு
மகிழ்ந்தது போலத்தான் இருந்தது
சில நிமிட உறக்கம்

விழித்து எழுந்த போது
மரத்தடி முழுதும்
மனிதர்களும் மாடுகளும்.

என் மரத்தடியில்
இவர்களுக்கு என்ன வேலை ?
கோபம் மிகுந்தது

அது ஒரு நொடி மட்டுமே

மறு நொடி என் மனதில்
பயணம் பற்றிய கவலை.
எழுந்தேன் புறப்பட்டேன்.

மரமே, நன்றி.
உன் நிழல் எனது சொந்தமில்லை.
எனக்கு பயணம் தான் முக்கியம்.

மீண்டும் வெயிலில்
பயணம் தொடர்ந்தது.
களைப்படையும் போது

காண்பேன் மற்றொரு மர நிழலை.

மன்னிப்பாய் மரமே,
உன்னை என் சொந்தம் என்று
ஒரு கணம் நினைத்ததற்கு.


Saturday, 27 March 2010

TODAY IS HOLIDAY

Friday, 26 March 2010

என் மகள் எனக்கு நான்கு வயதில் எழுதிய புகார் கடிதம்!

இந்த 'கடிதத்தை' எழுதிய தீபிகாவுக்கு இப்போது வயது இருபது. இதை எழுதும் போது வயது நான்கு. இதைவிட சீக்கிரமாக நீங்கள் உங்கள் அப்பாவுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கோ கடிதம் எழுதியிருக்கிறர்களா?

இது அம்மா அடித்து விட்டதை பற்றிய புகார் கடிதம்!



 

Thursday, 25 March 2010

சின்னச் சின்ன சந்தேகங்கள்

  1. ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைக்கும்போது இத்தனை பேர் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?
  2. ரெஸ்டாரென்ட் வாசலில் பிச்சை எடுக்கும் பெண்கள் எல்லாருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தை எப்படி இருக்கிறது?
  3. நெடுஞ்சாலைகளில் மோட்டல் என்ற பெயரில் இயங்கும் இடங்கள் சுகாதார துறை கண்ணில் படுவதில்லையே, ஏன்? 
  4. ரயில் நிலையங்களில் இருப்பதை விட பேருந்து நிலையங்களில் கடைகள் அதிகமாக இருப்பது பயணிகளின் வசதிக்காகவா அல்லது எதாவது வேண்டுதலா? 
  5. பேருந்து நிலையங்களில் சேரும் குப்பைகள் பயணிகள் வீட்டில் இருந்து அள்ளிக்கொண்டு வந்து போடுவதா அல்லது கடைக்காரர்கள் போடுவதா?
  6. இந்த குப்பைகளால் இடையுறு ஏற்படுவது கடைக்கரர்களுக்கா அல்லது பயணிகளுக்கா?
  7. பேருந்து நிலையங்களில் கட்டண கழிப்பறைகள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன? பயணிகள் சுகாதாரத்தை மனதில் கொண்டா? ஆம் என்பவர்கள் இந்த இடங்களில் பத்து நிமிடங்கள் நின்று விட்டு வர விரும்புவார்களா?
  8. அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் நின்றுகொண்டு தான் பயணிக்க வேண்டும் என்பது சட்டமா?
  9. குடிநீர் எல்லா இடங்களிலும் சுத்தமாகவும் இலவசமாகவும் கிடைக்க வழி உண்டா?

Wednesday, 24 March 2010

இரண்டு மூன்று நான்கு

அந்த மூன்று வார்த்தைகளை
நீ சொல்வாய் என்று நானும்
நான் சொல்வேன் என்று நீயும்
நாம் கழித்தது நான்கு ஆண்டுகள்.

ஆனால்
இறுதியில் நாம் சொன்னதென்னவோ
இரண்டு வார்த்தைகள் தான்.

போய் வருகிறேன்.


Tuesday, 23 March 2010

விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - இவங்க பண்ற அட்டகாசம் தாங்கவே இல்லை. இந்த பசங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போறாங்களா இல்லையா? பாடம் படிக்கவும் விளையாடவும் இவங்களுக்கு நேரம் இருக்கா இல்லையா?
இந்த பிள்ளைகள் பாடுற பாட்டுக்கு இவங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

வரிசையா உட்கார்ந்து கைதட்டி செயற்கையா சிரிச்சு தலையாட்டும் அம்மாக்களும் அப்பாக்களும் தாத்தா பாட்டிகளும் வேற வேலை வெட்டி பாக்கறதில்லையா? குழந்தைகள் ஜாலியாக பாடி என்ஜாய் பண்ணாமல் வெற்றி தோல்விக்கு சிரிச்சும் அழுதும் தங்கள் மென்மையான மனதை கஷ்டப்படுத்த வேண்டுமா?

இவ்வளவு அழுத்தம் இந்த சின்ன வயசில் இவங்களுக்கு தேவை தானா? எல்லா குழந்தைகளையும் போல இயல்பான இளம்பருவ வாழ்க்கை இந்த குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டுமா?

ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேற்றப்படும் குழந்தைகள் கண் கலங்குவதையும் பெரிய மனுஷத்தனமாக சிரித்து உணர்வுகளை மறைப்பதும் என்னால் ரசிக்க முடியவில்லை. குழந்தைகளை குழந்தைகளாக வாழவும் வளரவும் விடுங்கப்பா.

Monday, 22 March 2010

மோனியின் பத்தொன்பதாவது பிறந்த நாள்

 நேற்றுபோல இருக்கிறது
உன் முதல் பிறந்த நாள் கொண்டாடியது

வலது கட்டை விரலை
வாயில் திணித்துக்கொண்டு
இடது கையால்
கேக்கின் மேல் இருந்த
மெழுகு வர்த்தி சுடரை
எடுக்க முயன்ற
உன் சார்பில்
நான் கேக் வெட்டியது

இன்று உன் வயது
பத்தொன்பது

இந்த பிறந்த நாளில்
எங்களை பார்ப்பதற்காக 
ஆறு மணி நேரம்
பயணம் செய்து
நள்ளிரவில் வந்து சேர்ந்த
உனக்கு

நாங்கள் கொடுத்த
இன்ப அதிர்ச்சி
உனக்காக காத்திருந்த
கேக்கும்
எங்கள் முத்தங்களும்தான்

ஹாஸ்டலில் மகளை
படிக்க அனுப்பிய
எல்லா பெற்றோரும்
கலங்கும் ஒரு நொடி
இந்தக்கணம் தான்

எனது புதிய வலைப்பதிவு

இது புதிய முயற்சி.
தினமும் ஒரு பக்கம் மட்டும் எழுதலாம் என்று எண்ணம்.
முதலில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி, தேனம்மை.
உங்கள் யோசனை இது.
---------
குடையும் மழையும்

 உன்மேல் பட்டு விழும்
சின்ன மழைத்துளி
செய்த தவமென்ன?

என் குடைக்கு மட்டும்
சாபமிட்டது யார்?

உள்ளே வா.
விமோசனம் பிறக்கட்டும்
என் குடைக்கும்.
எனக்கும்.